02 December 2008

கடவுள் உண்டு நிரூபணம்

மனிதன் இந்த உலகை பார்க்கிறான்... தாவரங்கள், விலங்குகள், பூமி, சூரியன், நட்சத்திரங்கள். அவற்றில் ஒருவகை வடிவமைப்பை பார்க்கிறான்... ஒருவகை படைப்பை பார்க்கிறான்... ஓருவகை ஒழுங்கை பார்க்கிறான். அவன் கேட்கிறான், யார் இதைப் படைத்தார்? இந்த தெரியாத ஒழுங்கை படைத்தவரை கடவுள் என்று குறிப்பிடுகின்றான். [ஒழுங்கு = கடவுள்]

மனிதன் சக மனிதன் நோய்வாய் படுவதையும், இறப்பதையும் பார்க்கிறான். அவனுக்கு ஏனென்றோ, யார் செய்தாரென்றோ தெரியவில்லை. மேலும் அவனை சுற்றி நடக்கும் பல விசயங்கள் அவனுக்கு புரியவில்லை. அதில் எந்த காரணமும், முறையும், ஒழுங்கும் அவனுக்கு தெரியவில்லை. எந்த காரணமும், முறையும் அற்று ஒழுங்கின்றி தோன்றினாலும், இதை யாரோ சில காரணங்களுக்காக செய்கிறார் என்று நினைக்கிறான். இந்த தெரியாத ஒழுங்கின்மைக்கு பின்னுள்ள காரணகர்த்தாவை கடவுள் என்று குறிப்பிடுகின்றான். [ஒழுங்கின்மை = கடவுள்]

மொத்தத்தில், அவனை வியப்பில் ஆழ்த்தும் ஒழுங்கு ஆகட்டும், அல்லது குழப்பமூட்டும் ஒழுங்கின்மை ஆகட்டும், அவனுக்கு தெரியாததை கடவுள் என்று குறிப்பிடுகின்றான். [தெரியாதது = கடவுள்]

பிறகு, சில தெரியாதவற்றுக்கு சில காரணங்களையும், முறையையும் கண்டறிகிறான். சில ஒழுங்கற்றவைகளுக்கு பின்னுள்ள ஒழுங்கை உணர்கிறான். எல்லா ஒழுங்கற்றவைகளுக்கு பின்னும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இப்பொழுது, ஒவ்வொரு ஒழுங்கற்றவைக்கு பின்னுள்ள ஒழுங்கை காண முயற்சிக்கின்றான். அப்படி, மேலும் மேலும் பல ஒழுங்கற்றவைகளுக்கு பின்னுள்ள ஒழுங்கை கண்டறிகிறான். ஆனால், ஒரு ஆழ்ந்த அடிப்படையான ஒழுங்கின்மையில் தடுமாறுகிறான். அந்த அடிப்படை ஒழுங்கின்மைக்கு பின்னுள்ள ஒழுங்கை கண்டறிய மேலும் மேலும் கடுமையாக முயற்சிக்கின்றான்.

இப்பொழுது மெதுவாக ஒரு பெரிய அடிப்படை இயற்கை விதியை உணர்கின்றான்: இயற்கை முழு-ஒழுங்கின்மையை (சமநிலை) நோக்கியே செல்லும். அதுவே இவ்வுலகின் முடிவாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு முழு-ஒழுங்கின்மையை நோக்கி செல்லும் போது, தற்காலிகமாக எப்படி சில ஒழுங்கு (அண்டம், நட்சத்திரங்கள், கோள்கள், உயிர், மனம் ஆகியவைகள்) உருவாக முடியும் என்பதையும் உணர்கின்றான். இவ்வாறாக, அவன் சில ஒழுங்கானவைகளுடன் (உறுதியான, நம்பகமான) மற்றும் ஒழுங்கின்மைகளுடன் (உறுதியற்ற, நம்பகமற்ற) வாழ்கின்றான். இது உண்மையாக இருந்தாலும், ஏன் இயற்கை இப்படி இருக்க வேண்டும் என்பது அவனுக்கு தெரியவில்லை. அவன் தன் தேடலை தொடர்கின்றான்.

எப்படியாகிலும், இவ்வுலகின் தொடக்கத்தின் மூலக்காரணத்தை நோக்கும் போது ஒரு ஆழ்ந்த புதிரை அவன் உணர்கின்றான். மேலும், அவனால் அதை முழுமையாக புரிந்து கொள்ள முடியுமா என்று வியக்கின்றான். எப்பொழுதும் போல், பலர் இந்த தெரியாததை கடவுள் என விரைந்து முடிவு எடுக்கின்றனர். ஆனால், ஒரு சிலர் மட்டும், கடவுள் என்பது அது விளக்கும் தெரியாததை விட மிகத் தெரியாதது என உணர்கின்றனர்.

கடைசியில், எப்படியாகிலும் [கடவுள் = தெரியாதது]. கடவுள் உண்டா? உண்டு; ஏனென்றால், தெரியாதது இன்னும் இருக்கிறது. ஆனால், கடவுள் என்பது நீ நினைப்பது அன்று; ஏனென்றால், அது தெரியாதது!

தீவிர-வாத நோய்

எனக்கு ஒரு குழந்தைப் பருவ கதை ஞாபகத்திற்கு வருகிறது. இரண்டு காதல் பறவைகள் தங்கள் குடும்பத்திற்காக மிக கடினமான உழைப்பில் ஒரு அழகான கூடு கட்டின. ஒரு நாள், நீண்ட இரை தேடலுக்கு பிறகு கூடு திரும்பின. அவைகளின் கூட்டை வேறு ஒரு பறவை ஆக்கிரமித்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தன. காதல் பறவைகள் அவனிடம், "இது எங்களுடைய கூடு. இதை நாங்கள் மிகவும் கடின முயற்சியில் கட்டினோம்" என்றன. அவனோ, "நான் இக்கூட்டை இங்கு யாருமின்றி பார்த்தேன். இப்பொழுது இது என்னுடையது" என்றான். காதல் பறவைகள் அவனிடம் பல நாட்கள் தொடர்ந்து போராடின. பிறகு, காதல் பறவைகள் இதற்காக விரையமான நேரத்தையும், சக்தியையும் உணர்ந்தன. புதிதாக வேறு இடத்திற்கு சென்று தங்கள் குடும்பத்தை ஆரம்பித்தன.

நம் உலக வரலாற்றில் பல கரைகள் உள்ளன. மக்கள் தவறுகளை செய்துள்ளனர், செய்து கொண்டும் உள்ளனர். இங்கு பிழையற்ற நாடோ, சமூகமோ, இனமோ இல்லை. உன் பக்கமே சரி என்று வைத்துக் கொண்டாலும், கடந்து போன விசயங்களுக்காக எவ்வளவு நாள் போராட்டம் தேவையானது? உனக்கோ, உன் சந்ததிக்கோ அது எப்படி பட்ட பலன் பயக்கும்? உன்னை அடிமையாக வாழ சொல்ல வில்லை; ஆனால் உன்னால் அமைதிக்காக ஓரளவு நியாயமான உடன்பாடு செய்ய முடியுமா? உன் அமைதிக்காக! உன் குழந்தைகளின் அமைதிக்காக! எப்படி பார்த்தாலும், நீ கொல்லும் அப்பாவி மக்கள் உன் உண்மையான எதிரிகள் அல்லவே!

இதை நன்றாக ஞாபகத்தில் வை... அழித்தல் என்பது மிக எளிதானது. நீ பெரிதாக ஒன்றை சாதித்து விட்டாய் என்று கர்வப் படாதே. உண்மையாக சாதிக்க, நீ ஒன்றை உருவாக்க வேண்டும்... உன் நாட்டை, இனத்தை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்; அங்கு சுதந்திரமும், அறிவும் பொங்க வேண்டும்... ஆணும் பெண்ணும் சரிநிகர் காண வேண்டும்... எல்லோரும் வறுமையற்ற மகிழ்ச்சி காண வேண்டும்! இதை நீ இவ்வுலகிற்கும், உன் எதிரிக்கும் கர்வத்துடன் காண்பி!

ஒன்றை நான் மறந்தே போனேன்... இவைகளெல்லாம் உன் அறிவிற்கே எட்டாதென்று. நீ எந்த ஆதாரமுமற்ற சில குருட்டு நம்பிக்கையையே பின்பற்றுகின்றாய். அதற்கு இந்த சமூகமும் காரணம். இங்கு எந்த ஆதாரமுமற்ற சில குருட்டு நம்பிக்கைகள் பாலாபிசேகத்துடன் வரவேற்கப் படுகின்றன. இது அப்பட்டமாக பின்பற்றும் கொடுரத்திற்கு ஒரு பாளமாக, அடிதளமாக, ஒழிவிடமாக அமைகின்றது.

ஒரு கிராமமாக சுருங்கி போன இவ்வுலகத்தில் முன் எப்பொழுதை விட, நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம். இதில் ஒரு சமூகமோ, இனமோ, நாடோ கீழே போனால், அதை கைக் கொடுத்து தூக்கி விடவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை; இல்லையென்றால், அது நம் ஒவ்வொருவரையும் பாதிக்கும். நம்மிடம் பலவற்றை உருவாக்கும் அறிவும், ஆற்றலும் இருக்கு... சில வினாடிகளில் இவ்வுலகையே அழிக்கும் ஆயுதங்களும் இருக்கு! ஒன்றாக நாம் உயர முடியும்... இல்லையென்றால் ஒன்றாகவே வீழ்வோம்!