18 June 2011

கேட்பதெல்லாம்...

இது காண்பதெல்லாம்... பதிவின் தொடர்ச்சி.

பொருட்கள் உதாரணமாக கம்பியோ, தகடோ, சவ்வோ அதிரும் போது அவை காற்றிலுள்ள மூலக்கூறுகளையும் தாக்கி அதிரவைத்து பரவுகின்றன. இந்த அதிர்வு-அலைகளை காது மின்-அலைகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகின்றது. மூளை அதிலுள்ள பாங்கை, ஏற்கனவே கற்று உருவாக்கிய மாதிரிகளை கொண்டு உணர்ந்து கொள்கின்றது (மேலும்: அறிவின் மூலம்). அதை நாம் சத்தமாக உணர்கின்றோம். சத்தம் என்பது வெளி-உலகில் எங்கும் இல்லை. அது மூளையில் மட்டுமே உருவாக்கப்படுகின்றது. ஆக மூளையால் எந்தவித வெளி-உலக அதிர்வு-அலை தூண்டுதலும் இன்றி சத்ததை உருவாக்க முடியும். அப்படியே, மூளையில் ஏற்படும் சில கோளாறுகள், உதாரணமாக சிகோஃபெரனியா (Schizophrenia) எனப்படும் மனச்சிதைவு நோய், பலவிதமான சத்த-பிரம்மையை உருவாக்குகின்றன (மனவியல் பற்றிய போதுமான அறிவு இல்லாத காலத்தில், அப்படிப்பட்ட சிலர் தூதுவர்களாக ஆனார்கள்).

மூளை உருவாக்கிய மாதிரிகளே, நாம் உணரும் உலகம். ஆக, நாம் கேட்பது/பார்ப்பது/உணர்வது அனைத்துமே ஒருவகையில் மாயை போன்றது தான். இந்த மாயையை நாம் பொதுவாக உணருவதில்லை என்றாலும், கீழே உள்ள உதாரணங்கள், வெளியுலக-நிதர்சனத்திற்கும் மூளை-உருவாக்கிய-மாதிரிகளுக்கும் உள்ள வேறுபாட்டை சற்றே வெளிப்படையாக அறிவிக்கின்றன.


(சுருதி ஏறிகொண்டே போவதுபோல் தோன்றினாலும், ஒரே சத்தம் தான் திரும்ப திரும்ப கேட்கின்றது)




(இது மெக்கார்க் விளைவு எனப்படுகின்றது (McGurk effect). இங்கு சத்ததின் தூண்டுதலை, பார்வையின் தூண்டுதல் குழப்பிவிடுவதால், மூளை வேறுமாதிரியான சத்தத்தை உருவாக்குகின்றது. இதை ஒரு முறை கேட்ட பிறகு, மீண்டும் ஒருமுறை கண்களை மூடிக் கொண்டு கேட்கவும்)




(மெக்கார்க் விளைவுக்கு மற்றொரு உதாரணம். இதில் ஒவ்வொரு உதாரணத்திற்கும் காட்சி-வார்த்தை என்ன, சத்த-வார்த்தை என்ன எழுதப்பட்டுள்ளதை கவனிக்கவும். உண்மையான சத்தத்தை கண்ணை மூடிக் கொண்டு கேட்டு உறுதிபடுத்திக் கொள்ளலாம்)



ஒரு காட்சி, இரண்டு கண்களில் சற்றே மாறுபட்ட கோணத்தில் விழுகின்றது. இந்த வேறுபாட்டை கொண்டு மூளை முப்பரிமாண தோற்றத்தை உருவாக்குகின்றது (மேலும்: வண்ண ஆன்மீக உலகம்). இது போலவே, ஒரு அதிர்வு-அலை இரண்டு காதுகளுக்கும் வெவ்வேறு சமயத்தில் அடைவதை கணித்து சத்ததின் திசையை, இடத்தை மூளை கணிக்கின்றது. இதை உருவகப்படுத்தி, முப்பரிணமான திரைப்படம் பார்ப்பது போல் (3D கண்ணாடி வேண்டும்), முப்பரிணிமான ஓசையை (காதொலிப்பான் வேண்டும்) உருவாக்கலாம்.


(முப்பரிமாண மெய்நிகர் முடிவெட்டும் கடை. இதை காதொலிப்பான் (Headphone) கொண்டு கேட்க வேண்டும். நன்றாக இளைப்பாற உட்கார்ந்து கொண்டு, கண்களை மூடிக்கொண்டு கேட்கவும்)

17 June 2011

காண்பதெல்லாம்...

தனி ஒரு நபராக, சுயநினைவு (Consciousness) என்பது நம் ஒவ்வொருடைய அனுபவத்திலும் மிக நெருங்கிய அன்னோன்யமான ஒன்று. ஆனால் நம் அறிவுக்கோ மிகக் குறைவாக எட்டிய ஒன்று. இந்த மிக நெருங்கிய தற்சார்புடைய அனுபவத்தை, மனதைப் பற்றிய வெளிச்சார்புடைய அறிவாக மக்கள் தவறாக எடுத்துக்கொள்கின்றனர். அதனால் தான், பல்லாயிரம் வருடங்களாக மனதை பற்றி பல்வேறு அரை வேக்காடான கருத்துக்களை நம்பிக் கொண்டுள்ளனர். முறையான ஆராய்ச்சிகளும், ஆதாரங்களும் மாறுபட்ட கோணத்தை காட்டுகின்றன.

சுயநினைவை முதல்-நிலை-சுயநினைவு, மேல்-நிலை-சுயநினைவு, தன்-சுயநினைவு என பலவாறு பகுக்கலாம். அதில் பார்த்தல், கேட்டல் போன்ற நம் உணர்வுகள், சுயநினைவில் முதல் நிலையில் உள்ளவை. அதிலும் பார்வையை, நம் அனுபவத்தில் மிக தெளிவான, திடமான ஒன்றாக கருதுகின்றோம். அதனால் தான், "ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்" என்கின்றோம். அப்படிப்பட்ட பார்வையை ஒரு உதாரணமாக கொண்டு சுயநினைவை பற்றிய சில எளிய அடிப்படை உண்மைகளை அறிய முயலும் ஒரு தேடல் இது.

நாம் பார்ப்பது எப்படி? கண்களால் அல்ல, மூளையால் பார்க்கின்றோம். கண் என்பது புகைப்படக் கருவி போல் ஒளிச் செய்திகளை சேகரிக்கும் ஒரு புலன் உருப்பு. அது ஒளிச் செய்திகளை மின்-அலைச்-செய்திகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகின்றது. இந்த செய்திகளை கொண்டு, கோடுகள், விளிம்புகள், ஓரங்கள், நிறங்கள், உருவங்கள், பொருட்கள், முகங்கள், மனிதர்கள், இயக்கங்கள் என படிப்படியாக பல்வேறு பாங்குகளை மூளை அடையாளம் கண்டுகொள்கின்றது. மூளை இவற்றை எப்படி அடையாளம் கண்டுகொள்கின்றது? நாம் வளரும் போது, இந்த பாங்குகளை படிப்படியாக நம் மூளை கற்றுக் கொண்டு அதற்கேற்ப நரம்பணு-வலைச்சுற்றுக்களை (Neuronal Circuitry) உருவாக்குகின்றது (மேலும்: அறிவின் மூலம்). இவை நம் மூளை உருவாக்கிய உலக மாதிரிகள். முடிவாக, இந்த மாதிரிகளை உணர்வதையே, நாம் பார்த்தல் என்கின்றோம்.

மூளை உருவாக்கிய மாதிரிகளே, நாம் உணரும் உலகம். ஆக, நாம் பார்ப்பது/உணர்வது அனைத்துமே ஒருவகையில் மாயை போன்றது தான். இதில் ஏற்படும் சில குழறுபாடுகளை தான், ஆவியென்றும், பூதமென்றும், பேய் பிடித்ததென்றும், சாமி பிடித்ததென்றும், கூடுவிட்டு-கூடு பாய்தல் என்றும் மக்கள் கூறுகின்றனர். இந்த மாயையை நாம் பொதுவாக உணருவதில்லை என்றாலும், பல்வேறு மாயப் படங்கள் மூளை-உருவாக்கிய-மாதிரிகளுக்கும் வெளியுலக-நிதர்சனத்திற்கும் உள்ள வேறுபாட்டை சற்றே வெளிப்படையாக அறிவிக்கின்றன. கீழே உள்ள மாயப் படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். இப்பொழுது சற்றே அனுபவபூர்வமாக பாருங்கள். இது உங்கள் அடிப்படை சுயநினைவை பற்றிய உங்கள் அனுபவம். (இங்குள்ள படங்களை சொடுக்கி பெரிது படுத்தலாம்)

(இந்த இரண்டு படங்களும் அச்சு மாறாமல் ஒரே படங்கள் தான்)

(A மற்றும் B கட்டத்தில் உள்ள நிறங்கள் அப்படியே ஒன்றுதான். இப்படத்தை காகிதத்தில் நகழெடுத்து, இந்த கட்டங்களை வெட்டி எடுத்து அருகருகே வைத்து பார்க்கவும். நிறங்கள் என்பது வெளியுலக-நிதர்சனத்தில் எங்கும் இல்லை. அவை மூளை-உருவாக்கிய-மாதிரியின் அம்சங்கள். (மேலும்: வண்ண ஆன்மீக உலகம்))


(இது எந்த இயக்கமும் அற்ற அசைவற்ற படம்)



(உள்ளீடற்ற முகம். இது ஏமாற்று வித்தை அல்ல. முகம் பொதுவாக வெளி நோக்கியே இருப்பதால், உள்ளீடற்ற பக்கத்தையும் வெளிநோக்கிய முகமாக மூளை அனுமானிக்கின்றது. அந்த மாதிரியையே நாம் உணருகின்றோம் – நமது அறிவு பகுதி மூளைக்கு அது உண்மையல்ல என்று தெரிந்தாலும் கூட!)

பார்ப்பது என்பது ஒளி-அலைகளை மின்-அலைகளாக மாற்றி அதை ஆராய்ந்து அதிலுள்ள பல்வேறு பாங்குகளை கண்டறிவதென்றால், அதற்கு சில குறிப்பட்ட நேரம் ஆகவேண்டுமே. பிறகு எப்படி நாம் உடனடியாக பார்க்கின்றோம்? நாம் உடனடியாக பார்ப்பதில்லை. ஒன்றை ஒரளவு உணர ஆரம்பிக்கவே, தோராயமாக 50 மில்லி-வினாடிகள் ஆகும். நிறம், இயக்கம் என பார்வையின் பல்வேறு பண்புகள், மூளையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு கால-அளவில் கணிக்கப்படுகின்றன (இதில் தொடர் மற்றும் இணை கணிப்புகள் அடக்கம்). ஆக, நாம் எப்பொழுதும் தாமதமாகவே பார்க்கின்றோம், உடனடியாக/நேரடியாக பார்ப்பதில்லை. மேலும், தொடர்ச்சியாகவும் பார்ப்பதில்லை. தோராயமாக ஒவ்வொரு 50 மில்லி-வினாடிக்கு ஒரு முறை, நாம் பார்ப்பது மூளையில் படம் பிடிக்கப்பட்டு அதன் பாங்குகள் கணிக்கப்படுகின்றன. நம் மூளை காட்சியை தொடர்ச்சியாக பார்ப்பது போன்ற மாயையை உருவாக்குகின்றது. அதனால் தான், படச்சுருளிலுள்ள தனிப்பட்ட படங்களை வேகமாக ஓட்டி காட்டும் போது திரைப்படமாக கண்டுகளிக்கின்றோம்.

ஒவ்வொன்றையும் கண்டுகொள்ள நேரம் தேவைப்படும்போது, நாம் எப்படி பலவற்றை இவ்வளவு வேகமாக கண்டுகொள்கின்றோம்? உதாரணமாக ஒரு வீட்டில் நுழைந்த உடன்! இதும் ஒரு மாயை தான். நாம் எல்லாவற்றையும் உடனடியாக கண்டுகொள்வதில்லை. சூழ்நிலை மற்றும் கடந்தகால நினைவை பொருத்து, நம் மூளை ஏற்கனவே மூளையில் சேமித்தவற்றை வார்ப்புருக்களாக (Templates) பயன்படுத்தி, தேவை மற்றும் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அங்குள்ள ஒவ்வொரு பொருட்களையும், உருவங்களையும் ஒன்றன்-பின்-ஒன்றாக பூர்த்தி செய்கின்றது. அதனால் தான், ஒரே மாதிரியான இரண்டு படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை கண்டுகொள்ள நேரமாகின்றது.

(இந்த அவரை விதைகளுக்கிடையே ஒரு முகம் உள்ளது. கண்டுபிடிக்கவும்)

(முகத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், ஒரு சிறு குறிப்பு: படத்தின் கீழ் பகுதி. கீழே உள்ள எளிய சோதனையை முழுமனதோடு முயற்சி செய்யவும். ஏனெனில் இது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம். இங்கு இரண்டு அணிகள் உள்ளன. அதில் வெள்ளை-உடை-உடுத்திய அணி எத்தனை முறை பந்தை பரிமாறி கொள்கின்றனர் என்பதை கணக்கிடவும். எண்ணிக்கை சற்றே தவறிபோனாலும், நிறுத்தாமல் தொடர்ந்து கணக்கிடவும்)



பெரும்பான்மையானவர்கள் "அதை" பார்க்க தவறிவிடுகின்றனர். நாம் எல்லாவற்றையும் பார்ப்பது போல் தோன்றினாலும், சூழ்நிலைக்கேற்ப நம் மூளை சிலவற்றை தேர்ந்தெடுத்தும், மற்றவற்றை தவறவும் விடுகின்றது. ஏனெனில், எல்லாவற்றையும் அவ்வளவு விரைவாக கண்டுகொள்ள தேவையான வேகமோ, திறனோ நம் மூளைக்கு இல்லை.

மூளையின் நரம்பணுக்களுக்கு இடையே நிகழும் மின்-துடிப்புகளின் வேகம் சில 10-கள் முதல் சில 100-கள் வரை உள்ள ஹெர்ட்ஸ்கள் (Hz = ஒரு வினாடியில் நிகழும் துடிப்புகள்) இருக்கும் (இப்பொழுதுள்ள கணினியின் வேகம், சில 1,00,00,00,000-கள் ஹெர்ட்ஸ்கள் - GHz). மூளையின் மின்-துடிப்புகளின் வேகம் குறைவாக இருந்தாலும், இணை-கணிப்பு (Parallel Processing), வார்ப்புரு-பூர்த்தி-செய்தல் (Template Filling) போன்ற பல்வேறு உத்திகளை பயன்படுத்தி அதை ஓரளவு ஈடு செய்கின்றது. நரம்பணு-மின்-துடிப்புகளின் வேகம் ஏன் ஒரு சிறு வரம்புக்குள் உள்ளது? நரம்பணுக்கள் வேதி-அயனிகளை மின்னேற்றி (சேகரித்து), மின்னிறக்கி (வெளியேற்றி) மின்-துடிப்புகளை உருவாக்குகின்றது. இப்படி மின்னேற்றி தேவையான மின்னழுத்ததை உருவாக்க சில குறைந்தபட்ச நேரம் தேவைப்படுகின்றது.

மேலும், மூளை வேலை செய்ய அதிகமான ஆற்றல் தேவைப்படுகின்றது (நம் கால்களுக்கு இணையான அளவு). அதனால் பரிணாம வளர்ச்சி பார்வையில், மூளையின் அளவை அதிகரிப்பதோ, மூளையின் வேகத்தை அதிகரிப்பதோ அதிக செலவீனமாக ஒன்று. சாதாரண சமயங்களில், மூளை ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச தேவையான வேகத்தில் வேலை செய்கின்றது. ஆனால், மிக எச்சரிக்கையான, ஆபத்தான சமயத்தில் (உதாரணமாக, ஒரு ஆபத்திலிருந்தோ, விபத்திலிருந்தோ தப்பிக்கும் கணத்தில்) மூளை வேகமான வேகத்தில் வேலை செய்யும். அதனால், மூளையால் உலக செய்திகளை மேலும் வேகமாக கணிக்க முடியும். இப்படிப்பட்ட சமயங்களில், வெளி-உலக-இயக்கங்கள் மெதுவாக செல்லது போல் தோன்றும். வெளி-உலக வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், மூளை சாதாரண வேகத்தை விட வேகமாக கண்டுகொள்வதால், வெளி-உலக-இயக்கங்கள் மெதுவாக செல்வது போல் தோன்றுகின்றது (இதை உருவகப்படுத்தயே Slow-Motion எனப்படும் மெதுவாக செல்லும் காட்சிகள் திரைப்படத்தில் அமைக்கப்படுகின்றன). பல வெற்றிகரமான விளையாட்டுவீரர்களின் மூளை, இதை விளையாட்டுகளின் போதும் செயல்படுத்தலாம். நாம் வயதடையும் போது, மூளையின் வேகமும் மெதுவாக குறைகின்றது. அதனால், வெளி-உலகம் வேகமாக செல்வது போல் தோன்றும்.

03 June 2011

அறிவின் மூலம்

எந்த ஒன்றையும் வடிவமைப்பதற்கான அல்லது தீர்வு காண்பதற்கான எளிய அடிப்படை வழிமுறை, சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறை (Random Process). அதாவது எதேச்சையாக நிகழும் வடிவமைப்பு. இது குலுக்குச் சீட்டில் வெற்றி பெருவது போன்றது. இது சில செங்கற்களை தரையில் தூக்கி எறிந்து ஒன்றன்-மேல்-ஒன்றாக அமைந்த கோபுரத்தை உருவாக்குவது போன்றது. இவற்றை பலமுறை தொடர்ந்து திரும்ப, திரும்ப செய்தால் ஒருமுறை அது நிகழலாம். இது பல்வேறு வடிவங்கள் மேகக்கூட்டத்தில் உருவாகுவது போன்றது. பல்வேறு காரணிகளை...கட்டுபாடுகளை பொருத்து, அதன் வாய்ப்பு விகிதம் (நிகழ்தகவு) மிகக் குறைவான அளவிலிருந்து மிக அதிகமாக அளவுவரை இருக்கலாம் – அதாவது முற்றிலும் சீரற்றோ (Random) அல்லது வெகுவாக தீர்மானிக்கக் கூடுமாறோ (Determined) இருக்கலாம்.

கார்பன் அணுக்கள் இணைந்து வைரமாக உருவாக மிகவும் ஏற்ற தட்பவெப்பநிலை, அழுத்தம் என பல்வேறு காரணிகள் வேண்டும். இப்படிப் பட்ட சூழ்நிலை அமைவது எவ்வளவு அரிது என்றாலும், இந்த பரந்த அண்டவெளியில், இந்த நீண்ட அண்ட காலவெளியில், எங்கோ எப்பொழுதுதோ இந்த சூழ்நிலை ஏற்படலாம். அப்படியே, நாம் வைரத்தை இந்த உலகத்தில் காண்கின்றோம். அப்படியே, உலகத்தில் உள்ள அனைத்தும் உருவாகி இருக்க வேண்டும். அப்படியே, முதல் மரபணு (DNA) மூலக்கூறும் உருவாகி இருக்க வேண்டும் (அது இன்றுள்ள மரபணுவை விட பலமடங்கு எளிமையாக இருந்திருக்க வேண்டும்). ஆனால், இந்த உலகத்தில் உள்ள அனைத்து வடிவமைப்புகளும், சாத்தியமாகக் கூடிய கணக்கற்றவைகளில் ஒரு சிறு பகுதியே!

மரபணு-மூலக்கூறின் முக்கியத்துவம், அது உயிர்களின் வடிவமைப்பு மாதிரிகளை குறியீடுகளாக வைத்திருப்பதில் இருக்கின்றது. அது நகல்கள் (இனப்பெருக்கம்) எடுக்கப்படும் போது, அதன் மரபணு-குறியீடுகள் பெரும்பாலும் அடுத்த தலைமுறைக்கு சென்றாலும், ஒரு சில முறையற்ற, சீரற்ற பிழைகள் (மரபு-பிழைகள்) நிகழலாம். பெரும்பாலான பிழைகள் ஏற்றவையாக இல்லாது மடிந்து போனாலும், அரிதாக ஒரு சில பிழைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கலாம். அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும். இவ்வாறு பல கோடி வருடங்களாக, சுற்றுச்சூழலுக்கு தகுந்த வடிவமைப்புகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து உருவானவையே பாக்டீரியா, மீன்கள், தாவரங்கள் முதல் மனிதன் உட்பட அனைத்து விலங்குகள் வரை. இதை பரிணாமம் (Evolution) என்கின்றோம்.

பரிணாமத்திலும் சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறையே அடிப்படையில் புதிய வடிவமைப்பு வெளிப்படும் முறை. ஆனால் வெளிப்பட்ட, தேர்ந்த வடிவமைப்புகள் மரபணு குறியீடுகளாக சேமித்து வைக்கப்படுகின்றன. மேலும் தேர்ந்த வடிவமைப்பு தகவல்கள் மற்றவைகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. பகிர்தல் பொதுவாக பாலினப் பெருக்கத்தில் ஏற்படுகின்றது. இது நல்ல மரபணுக்கள் மக்கள்தொகையில் பரவவும், கெட்ட மரபணுக்களை களை எடுக்கவும் உதவுகின்றது. இது விலங்குகள் போன்ற சிக்கலான மேம்பட்ட உயிரினங்கள் மற்றும் அவற்றின் மூளை போன்ற நுட்பமிக்க உருப்புகள் பரிணாம வளர்ச்சி அடைய முக்கிய காரணமாகின்றது.

தகல்களை சேமித்தல் மற்றும் பகிர்தல் என்பது கற்றலின் அடிப்படை பண்புகள். உயிர்களின் பரிணாமத்தை கூர்ந்து நோக்கினால் கற்றலின் அடிப்படை செயல்முறையை அறிந்து கொள்ள முடியும். அதிலுள்ள முக்கிய அடிப்படை படிகள்:
  • உருவாக்குதல்: தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற வடிவமைப்புகள் தொடர்ந்து உருவாகுதல். இது இனப்பெருக்கம் மற்றும் அதன் மரபு-பிழைகளால் ஏற்படுகின்றது.
  • தேர்ந்தெடுத்தல்: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வடிவமைப்புகள் மட்டுமே பிழைக்கின்றன. இதை இயற்கை-தேர்வு-முறை (Natural Selection Process) என்கின்றோம்.
  • சேமித்தல்: தேர்ந்தெடுத்த வடிவமைப்புகள் மரபணு-மூலக்கூறில் மரபணு குறியீடுகளாக (Genes) சேமிக்கப்படுகின்றது.
  • பகிர்தல்: தேர்ந்த வடிவமைப்புகளை மற்றவற்றுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. இது பொதுவாக பாலினப் பெருக்கத்தில் ஏற்படுகின்றது (மற்ற சில வழிகளும் உண்டு)
அடிப்படையில் இந்த படிகளை உருவகப்படுத்தியே மூளையும் கற்று கொள்கின்றது. ஆனால், பரிணாமத்தை ஒப்பிடும் போது, மூளைக்கு பல மேன்பாடுகள் உண்டு. இனப்பெருக்கம், அதனால் ஏற்படும் மரபுபிழைகளை கொண்டு தேர்ந்த வடிவமைப்புகள் வெளிப்பட ஆயிரமாயிர தலைமுறைகள் தேவை. அதனால் பரிணாம வளர்ச்சிக்கு நீண்ட நெடிய காலம் தேவைப்படுகின்றது. இதை ஒப்பிடும் போது, தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற வடிவமைப்புகளை மூளை பல மடங்கு அதிவேகமாக உருவாக்க முடியும். மேலும் மரபணு-மூலக்கூறை ஒப்பிடும் போது, மூளையின் சேமிக்கும் திறன் பலமடங்கு அதிகமானது, நுட்பமானது.

வேதி-அயனிகளை (மின்னூட்டணுக்கள்) செய்திகளாக/குறிப்பலைகளாக கடத்தி, நரம்பணு-வலைச்சுற்றுக்களை பொருத்து பகுத்தாய்ந்து மூளை வேலை செய்கின்றது. பரிணாம வளர்ச்சியில் வடிவமைக்கப்பட்ட சில நரம்பணு-வலைச்சுற்றுக்கள் பிறக்கும் போதே மரபணுக்களை கொண்டு வடிவமைக்கப்படுகின்றது. மற்றவற்றை அனுபவத்தின்/கற்றலின் மூலம் மூளை வடிவமைக்கின்றது. மூளை கற்கும் வழிமுறையை, குழந்தைகள் எப்படி நடக்க கற்றுக்கொள்கின்றனர் என்பதை பார்த்து அறிந்து கொள்ள முடியும்.
  • உருவாக்குதல்: இது குழந்தை பல்வேறு விதமாக நடக்க முயலும் பயிற்சியால் ஏற்படுகின்றது. ஒவ்வொரு விதமும் வெவ்வேறு தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகளை குறிக்கின்றது.
  • தேர்ந்தெடுத்தல்: எந்த விதம், அதாவது எந்த நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகள் தகுந்த விளைவுகளை தருகின்றதோ அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இது புலன்கள் மூலம் பெறப்படும் செய்திகளை (உணர்வுகள்) ஒப்பிட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இங்கு சமன்நிலை-உணர்வான, காதினுள்ளே உள்ள திரவத்தின் நிலையை கொண்டு அறியும் உணர்வு முக்கியமானது; பார்வை உணர்வும் முக்கியமானது. ஆனால், புலன் செய்திகளையும் உணர்ந்து கொள்வதும், எந்த புலன் செய்திகள் ஒரு விசயத்திற்கு பொருத்தமானவை என்பதை உணர்ந்து கொள்வதும் கற்றலின் பகுதிகளே.
  • சேமித்தல்: தேர்ந்தெடுக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகள் மூளையில் நினைவகமாக சேமிக்கப்பட்டு தொடர்ந்து மேலும், மேலும் சரி செய்யப்படுகின்றது மற்றும் விரிவு படுத்தப்படுகின்றது.
  • பகிர்தல்: பெற்றோர்கள்/பெரியவர்கள் குழந்தைக்கு நடக்க கற்று கொடுப்பது; உதவி செய்வது. குழந்தை அடுத்தவர்களை பார்த்து முயற்சிப்பது; கற்றுக் கொள்வது; இவ்வாறு ஏற்கனவே கற்றவை, கற்ற முறை, குழந்தையுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
பிறக்கும் போதே குழந்தையின் மூளை தேர்ச்சி அடையாத சில நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகளோடு இருக்கும். இதைக் கொண்டு, குழந்தை பல்வேறு விதமாக நடக்க முயலும் போது நிகழும் சில எதேச்சையான சமன்நிலை பெற உதவிய நரம்பணு-வலைச்சுற்று தொடர்புகள் மேலும் வலிமைப்படுத்தப்படும்; மற்ற தொடர்புகளின் வலிமை மேலும் குறைக்கப்படும். இவ்வாறு நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகள் மேலும் சரிசெய்யப்பட்டு விரிவுபடுத்தப்படும். இதை உடனடியான/நேரடியான கற்றல் (Online Learning) எனலாம். இதைத் தவிர, குழந்தை முயன்ற ஒவ்வொரு நிலைகளையும் (கால்கள், கைகள், உடல் போன்றவற்றின் தசைகளை கட்டுப்படுத்தும் செய்திகள்), அதற்கான புலன் செய்திகளையும், மூளை ஒரு தற்காலிக இடத்தில் “சோதனைச்-செய்திகளாக” சேமித்து வைத்துக் கொள்ளலாம். உடல் ஓய்வெடுக்கும் போது, அதாவது தூங்கும் போது, இந்த சோதனைச்-செய்திகளை கொண்டு நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகளை பல்வேறு விதமாக பலமுறை மாற்றி அமைத்து எப்படிப்பட்ட வலைச்சுற்றுகள் தகுந்த விளைவுகளை கொடுக்கின்றது என சோதித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு முறையிலும், படிப்படியாக நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகள் மேலும் சரிசெய்யப்பட்டு விரிவுபடுத்தப்படும். இதை பிற்பாடு/மறைமுக கற்றல் (Offline Learning) எனலாம். இது தூக்கத்தின் ஒரு முக்கிய செயல்பாடாக இருக்க வேண்டும். குழந்தை நன்றாக, சகஜமாக நடக்க, இந்த செயல்முறை ஒவ்வொரு நாளும் வருடக்கணக்கில் தொடர வேண்டும். மேலும், இதில் பெற்றோர்கள்/பெரியவர்கள் குழந்தைக்கு தரும் தூண்டுதல், உற்சாகமூட்டல், மேற்பார்வை, உதவி போன்றவை மற்றொரு முக்கிய பகுதி. இவையின்றி குழந்தையின் வளர்ச்சி என்றென்றைக்கும் முடமாகி போகலாம்.

வடிவமைக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகளை நினைவகமாக (Memory) கருதலாம். மூளையின் நினைவகத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்: செயல்முறை-நினைவகம் (Procedural memory) மற்றும் அறிவிப்பு-நினைவகம் (Declarative memory). செயல்முறை-நினைவகம் பல்வேறு செயல்முறைகளை கட்டுப்படுத்துகின்றன. நிற்க, நடக்க, ஓட, ஆட, நீந்த, ஓட்ட, எழுத என ஒவ்வொரு செயலுக்கும் செயல்முறை-நினைவகம் வேண்டும். நாம் ஒரு செயலை “செய்ய” கற்கும் போது செயல்முறை-நினைவகம் உருவாக்கப்படுகின்றது. புலன் செய்திகளிலிருந்து, நாம் ஒன்றை “அறிந்து”/”உணர்ந்து” கொள்ள கற்கும் போது அறிவிப்பு-நினைவகம் உருவாக்கப்படுகின்றது. பார்க்க, கேட்க, சுவைக்க, நுகர என ஒவ்வொரு உணர்வுகளுக்கும் அறிவிப்பு-நினைவகம் வேண்டும். புலன் செய்திகளில் உள்ள பாங்கை கண்டறிய (Pattern recognition) கற்பதே அறிவிப்பு-நினைவகம் உருவாக்கத்தின் அடிப்படை.
  • உருவாக்குதல்: பல்வேறு விதமாக பாங்கை கண்டறிய முற்படுதல்.
  • தேர்ந்தெடுத்தல்: எந்த விதம், அதாவது எந்த நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகள் தகுந்த விளைவுகளை தருகின்றதோ அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
  • சேமித்தல்: தேர்ந்தெடுக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகள் மூளையில் நினைவகமாக சேமிக்கப்பட்டு தொடர்ந்து மேலும், மேலும் சரி செய்யப்படுகின்றது மற்றும் விரிவு படுத்தப்படுகின்றது.
  • பகிர்தல்: பெற்றோர்கள்/பெரியவர்கள்/ஆசிரியர்கள் கற்று கொடுப்பது; அடுத்தவர்கள் மற்றும் புத்தங்கள் போன்றவற்றிலிருந்து கற்றுக் கொள்வது.

(ஒரு குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மனித உருவத்தை மேல்கண்டவாறு உடல் இல்லாமல் வரைவதை காணலாம். குழந்தைகள் முகம், கைகள், கால்கள் என முக்கியமான பாங்குகளை முதலில் கண்டறிய கற்று கொள்ளலாம். பிறகு மெதுவாக மற்ற பாங்குகளை மேலும் துள்ளியமாக கண்டறிய கற்று கொள்ளலாம்)

இவ்வாறு கற்றல், படிப்படியாக உலக மாதிரியை நினைவகமாக உருவாக்குகின்றது (ஒலியை இசைத்தட்டுகளில் சேமிப்பது போல்). இதில் உலகில் காணப்படும் அனைத்து படிநிலைகளும், தொடர்புகளும், கூட்டுகளும், பிரிவுகளும், அவற்றிலிருந்து பெறப்படும் பொதுவாக்கலும் (Generalization or Abstraction), அவற்றின் காரண-விளைவுகளும் அடங்கும். இதைக் கொண்டு உலகை உணர்ந்து/அறிந்து/புரிந்து கொள்கின்றோம். இது மேலும் திறம்பட கற்கும் செயல்முறைகளை கற்க வழிவகுக்கின்றது. இது தெரிந்த, ஒத்த, தொடர்புடைய சிக்கல்களுக்கு வழி காணவும், திட்டமிடவும் உதவுகின்றது.

முற்றிலும் புதிய சிக்கலுக்கான தீர்வை மூளை எப்படி கண்டுகொள்கின்றது? மூளையில் உலக மாதிரி உள்ளது. இதைக் கொண்டு சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறையை (மற்றும் பரிணாம வழிமுறையை) மூளையால் உருவகப்படுத்த முடியும். அது பல்வேறு தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற (கிறுக்குத்தனமான!) யோசனைகளை உருவாக்கி அவற்றை உலக மாதிரியை கொண்டு சோதனை செய்து சரிபார்க்கலாம் (இது மூளையின் பின்னணில் தொடர்ந்து நடக்கலாம்). அதில் ஒரு யோசனை அல்லது தீர்வு எதேச்சையாக சிக்கலை தீர்க்கும் போது, அது வெற்றியின் தருணமாக உணரப்படுகின்றது! (ஒரு மேதையின் இரகசியம், முற்றிலும் புதிய சிக்கலை தீர்க அதிக வாய்ப்பு கிடைக்குமாறு, எப்படி அவரது மூளை திறம்பட மேம்பட்ட உலக மாதிரியை உருவாக்குகின்றது என்பதில் உள்ளது)

இப்படி கற்றவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் போது, அது மேலும் விரிவடைந்து வளர்ச்சியடைந்து பல புதிய பரிமாணங்களை தொடுகின்றது. கற்றல், உணர்தல், யோசித்தல், புரிந்து கொள்ளுதல், காரண-காரியங்களை அறிந்து கொள்ளுதல், சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், திட்டமிடுதல் போன்ற மூளையின் பல திறமைகளை ஒருமித்தமாக அறிவு அல்லது அறிவாற்றல் என்கின்றோம். இந்த அறிவை கொண்டு, கட்டுப்பாட்டுடன் திட்டமிட்டு மனிதன் பலவற்றை வடிவமைக்கின்றான். அது அறிவுமுறை வடிவமைப்பு (Intelligent design)!



இது நரம்பு-இயங்கியல் (Neuroscience), Cognitive science, செயற்கை அறிவு (AI) முதலிய ஆராய்ச்சிகளிலின் அறிதல்களை கொண்டு இயற்கை-வடிவமைப்பு, பரிணாமம், கற்றல், அறிவு ஆகியவற்றை இணைத்த ஒரு தகவல்-கோட்பாடு (Information theory) பார்வை.



June 4, 2011

ஆறாம் அறிவு?

மற்ற விலங்குகளுக்கும் ஐந்து புலன் உணர்வுகள் உண்டு என்றும் (அதை ஐந்து அறிவாக கொண்டு) மனிதனுக்கு மட்டும் ஆறாவது அறிவான, பகுத்தறிவு உண்டு என்றும் சொல்லப்படுகின்றது. இது உண்மையென்றால், ஏன் இவ்வளவு மடத்தனங்களும், மூடநம்பிக்கைகளும் மனிதனிடத்தில் கொட்டி கிடக்கின்றது?

மனிதனுக்கு மட்டுமே சொந்தமான ஆறாவது அறிவு, எந்த விதத்திலும் அறிவியல் உண்மை அல்ல. மனிதன் மற்ற விலங்குகளிலிருந்தே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளான். அவனுக்கென திடீரென புதிதாக அறிவெல்லாம் வளரவில்லை. ஏற்கனவே மற்ற விலங்குகளில் உள்ளவற்றின் திறம்/தரம் சிலவற்றில் சற்றே மனிதனுக்கு அதிகரித்துள்ளது (Not quantity; just some quality). குரங்கினங்களை, டால்ஃபீன்களை, ஏன் காக்கைகளை கூட கூர்ந்து நோக்கினால் அது எளிதாக விளங்கும். உண்மை என்வென்றால், ஆராய்ச்சியாளர்கள் மற்ற விலங்குகளுக்கும் மனிதனுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்னவென்று சல்லடை போட்டே தேட வேண்டி உள்ளது. ஏனெனில் அப்படி எதுவும் பெரிதா இருக்கக் காணோம்.

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம்: பகிர்தல். அதற்கு தேர்ந்த மொழி தேவை. மனிதன் மட்டுமே குழந்தைகளுக்கு முனைப்போடு கற்று தருகின்றான் (Active Teaching). முறையான கல்வி மட்டுமே மனிதனின் அறியாமையை போக்குகின்றது.

பகுத்தறிவு பற்றி: நம்பிக்கைகளின் மூலம்

உணர்வுகள் பற்றி: அர்த்தங்களை தேடி