29 April 2011

பழமை பேசியே

இயற்கை இயல், காதல் கணிதம்,
என எந்த பாகுபாடுமின்றி அனைத்திற்கும்,
பாட்டெழுதியே பாடாவதி ஆனோமோ?
உண்மையும் பொய்யும் கற்பனையும் மிகையும்
ஒன்றே கலந்து உருப்படாமல் போனோமோ?

மீன் கொடுப்பதை விட, மீன்
பிடிக்க கற்று கொடுப்பது முக்கியம்.
சமன்பாட்டை விட அது வந்த முறை முக்கியம்.
விடையை விட அதன் வழிமுறை முக்கியம்.
அறிதலை விட அறிந்த முறை முக்கியம் - இதை
நம் முன்னோர் அடுத்த தலைமுறைக்கு
கொடுக்க தவற, தவறியே போனோமோ?

முன்னோர் கொடுத்ததில் அறியாமையும் பாதி,
அதை அறியாமல் முடங்கி போனோமோ?
அதன் விளைவில் வேதனையும் பாதி,
அதை உணராமல் மூழ்கி போனோமோ?
உண்மை வரலாறு தேடி கற்காமல்,
பழம்பெருமை பேசி பாழாகி போனோமோ?

பழம் கதைகள் மட்டுமே பேசியது போதும்,
நாளை நம் சந்ததி நம்மை பேசட்டும் வா!
நம் பெருமை நாமே பேசியது போதும்,
அதை அடுத்தவர் பேசட்டும் வா!