16 July 2010

மன விளையாட்டு



நான் விரும்பியதை எல்லாம், நான் அடைய முடியாது;
அதை நான் அறிவேன் நன்று; ஆனாலும்,
நான் அடைய விரும்புகின்றேன்...நான் அடைய முடியாததை.
என்ன வினோதம்?! இது என்னுடைய மனம்!

புகை பிடித்தல் கெடுதல், அதை நான் அறிவேன்.
பலவித பொருட்களும் கெடுதல், அதையும் நான் அறிவேன்.
அதிலிருந்து மீள நினைக்கின்றேன், ஆனால் என்னால் முடியவில்லை.
ஆக... என் மனம் மீள விரும்புகின்றது, ஆனாலும் அதற்கு மீள விருப்பமில்லை!
இப்பொழுது... என் மனம் யார் கட்டுப்பாட்டில் என்பதுதான், மிகப்பெரிய கேள்வியோ?!

ஆனாலும் நான் எப்படி மீள்வது?
இன்று ஒரு நாள் நிறுத்தினால்... சற்றே கொஞ்சம் குறைத்துக் கொண்டால்,
இனிதாக ஏதாவது கொடுத்து, என்னையே நான் ஊக்கப் படுத்தாலாம்.
கட்டுபாட்டு வேண்டும் போது, எனக்கே நான் லஞ்சம் கொடுத்து கொள்வேன்.
கடின உழைப்பு வேண்டும் போது, என்னையே நான் ஊக்கப்படுத்தி கொள்வேன்.
ஆறுதல் வேண்டும் போது, என்னையே நான் தேற்றி கொள்வேன்.
என் மனம் அதற்கே லஞ்சம் கொடுத்து கொள்கின்றது...
என் மனம் அதுவாக ஊக்கப்படுத்தி கொள்கின்றது...
என் மனம் அதுவாக தேற்றி கொள்கின்றது...
என் மனதிற்கே என் மனதை தெரியாதது போல்!

எப்படி என் நூற்றுக்கணக்கான தசைகளை ஒருங்கிணைத்து கட்டுபடுத்தி,
என்னை நான் சமன்நிலைபடுத்தி, என் கால்களை நகரவைத்தேன்,
என்பதை பற்றி ஒன்றும் நான் அறியேன்; ஆனாலும்,
நான் சுய-உணர்வோடு நடப்பதாக நினைக்கின்றேன்!

குரங்கினால் முடியும்; கைபை கால்குலேட்டரால் முடியும்; ஆனால்,
ஓர் ஏழு இலக்க எண்ணை, தற்காலிக நினைவில் வைக்க என்னால் முடியாது.
தற்காலிக நினைவாகட்டும் அல்லது நீண்டகால நினைவாகட்டும்,
எங்கு சேமித்தேன், எப்படி சேமித்தேன், எப்படி திரும்ப பெற்றேன்,
என்பதை பற்றி ஒன்றும் நான் அறியேன்; ஆனாலும்,
நான் சுய-உணர்வோடு நினைவில் கொள்வதாக நினைக்கின்றேன்!

எப்படி பொருளுக்கு ஏற்ற வார்த்தைகளை பொறுக்கி எடுத்தேன்,
எப்படி இலக்கணத்திற்கு ஏற்ப வார்த்தைகளை கோர்த்து வைத்தேன்,
எப்படி அர்த்தமுள்ள வரிசையில் வாக்கியங்களை அடுக்கி வைத்தேன்,
என்பதை பற்றி தெளிவாக நான் அறியேன்; ஆனாலும்,
நான் சுய-உணர்வோடு பேசுவதாக நினைக்கின்றேன்!

என் தண்டு வடம் சேதமடைந்தால், என் உடல் செயல்-முடக்கம் அடையும்.
என் பார்வை-மூளை சேதமடைந்தால், என் பார்வையில் குறை உண்டாகும்.
என் செவி-மூளை சேதமடைந்தால், என் கேட்டலில் குறை உண்டாகும்.
என் தொடு-உணர்-மூளை சேதமடைந்தால், என் தொடு-உணர்வில் குறை உண்டாகும்.
என் நுகர்-மூளை சேதமடைந்தால், என் நுகர்-உணர்வில் குறை உண்டாகும்.
மற்றும் பலவகை மூளை சேதத்தால்...
விருப்பு வெறுப்புகள், வலி, இன்பம், சாந்தம், கோபம்,
சுய-உணர்வு, திசை உணர்வு, கால உணர்வு, சொந்த-பந்த உணர்வு
என பலவகை உணர்வுகள் தடம்மாறி போகும்!
மற்றும் பலவகை மூளை சேதத்தால்...
வார்த்தைகளை அறிதல், முகங்களை அறிதல், இசையை அறிதல்,
என பலவகை அறிதல்கள் இல்லமால் போகும்!
மற்றும் பலவகை மூளை சேதத்தால்...
அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், நினைவில் கொள்ளுதல்,
விளக்குதல், சிந்தித்தல், கட்டு படுத்துதல், முடிவெடுத்தல்
என பலவகை திறன்கள் இல்லமால் போகும்!
ஆனாலும்... இவை எல்லாம் நன்றாக வேலை செய்யும் போது,
அது என் முழு-சுதந்திர சுயேச்சையான எண்ணமாக நினைக்கின்றேன்!

02 July 2010

நான் யார்?

நான் யார்? - ஆண்டிகளும், யோகிகளும், தத்துவ ஞானிகளும் ஆயிரமாயிரம் வருடங்களாக கேட்ட கேள்வி! அதற்கான விடையை, டார்வின் 150 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்திருந்தாலும், இப்பொழுது உயிரை பற்றி நமக்கு அக்குவேர் ஆணிவேராக தெரியும். உயிர் என்பது ஒருவகை சிக்கலான வேதிவினைகளின் தொகுப்பு. அதன் அடிப்படை வினை, அமினோ அமிலங்களை (உணவு) கொண்டு மரபணுக்கள் (DNA மூலக்கூற்றின் பகுதி) எனப்படும் அச்சுக்களை பயன்படுத்தி புரதங்களை (உடலின் கட்டுமான பொருள்) உருவாக்குவது தான்.

[மரபணு] + [அமினோ அமிலங்கள்] --> [புரதம்]

நம் உடலின் பகுதிகள் ஒவ்வொன்றும் (இரத்தம், தோல், இருதயம், மூளை...) வெவ்வேறு புரதங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை புரதமும் வெவ்வேறு மரபணுக்களை பயன்படுத்தி ஆனால் ஒரே அமினோ அமிலங்களை கொண்டு வார்க்கப்படுகின்றன. நம்மை, அதாவது நம் அக மற்றும் புற பண்புகளை புரதங்கள் தீர்மானிக்கின்றன...புரதங்களையோ நம் மரபணுக்கள் தீர்மானிக்கின்றன. இவ்வாறு நம்மை நம் மரபணுக்கள் தீர்மானிக்கின்றன. பாக்டீரியா, செடி கொடிகள், மீன்கள், பறவைகள், ஆடு மாடுகள், சிங்கம் புலிகள், குரங்கு மனிதர்கள் என அனைத்து உயிர்களும் நான்கே எழுத்துக்களை கொண்டு எழுதப்பட்டுள்ளது. அவை A, C, G, T. இவை ஒவ்வொன்றும் ஒரு DNA-மூலக்கூற்றின் சிறு-பகுதி-மூலக்கூற்றை குறிக்கின்றது. DNA மூலக்கூற்றை ஒரு நீண்ட ஏணிப்படியாக கருதினால் அதன் படிகள் இந்த நான்கு சிறு-பகுதி-மூலக்கூறுகளை (எழுத்துக்களை) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதை வரிசைப்படுத்தி எழுதினால் அதை மரபணு-வரிசை எனலாம். ஒரு 10 படி வரிசைக்கு உதாரணம்: CAGGAATGCA. இதில் ஒரு படி மாறினாலும் அதனால் உருவான புரதம் முற்றிலும் வேறுமாதிரியான பண்புகளை தரலாம்.

நாம் உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று என பல காரணிகள் புரத உருவாக்கத்தை பாதிக்கின்றன. மேலும் சூரியனின் புற-ஊதா கதிர்கள், புகைப்பிடித்தல் போன்றவை மரபணுக்களை சிதைக்கின்றன. இவ்வாறாக நம்முடைய சூழல்கள் (உணவு மற்றும் இதர பழக்கங்கள், வாழ்க்கை மற்றும் கலாச்சார முறைகள், உள்/வெளி சுற்றுப்புற சூழல்கள்) நம்மை தீர்மானிக்கின்றன.

[நான் யார்?] = [என் மரபணுக்கள்] + [என் சூழல்கள்]

இப்பொழுது மரபணு பகுப்பாய்வு (இரத்த சோதனை போல்) பரவலாக செய்யப்படுகின்றது. மரபணு பகுப்பாய்வுக்கு நம்முடை எச்சிலை அனுப்பி வைத்தால் போதும். ஏனென்றால், எச்சில் உட்பட நம்முடைய அனைத்து உயிரணுக்களின் உட்கருவிலும் அதே மரபணுக்கள் தான் உள்ளது. அம்மாவின் ஒரு உயிரணு (கருமுட்டை), அதன் உட்கருவிலுள்ள 50% மரபணுக்களுடன், அப்பாவின் 50% மரபணுக்கள் (விந்து) இணையும் போது - அதாவது கருவுறும் போது - நம் முதல் உயிரணு உருவாகின்றது. அது தொடர்ந்து புரதங்களை உருவாக்கி பிளவடைந்து புதிய உயிரணுக்களை உருவாக்கின்றது. ஒவ்வொரு வகை உயிரணும் (இரத்தம், தோல், இருதயம், மூளை...) ஒவ்வொருவகை புரதங்களை தயாரிக்கும் நிபுணர்களாகின்றது.

கீழே உள்ள படம், நமது உட்கருவிலுள்ள மரபணுக்கள் (22 ஜோடி குரோமொசோம்கள் மற்றும் XY குரோமொசோம்கள்; குரோமொசோம் என்பது DNA மூலக்கூற்றை சுற்றியுள்ள ஓர் உறை) மற்றும் இழைமணிகளின் (உயிரணு ஆற்றல் உரு) மரபணுக்களை காட்டுகின்றது.
  • 1-22 ஜோடி குரோமொசோம்கள், ஒரு தொகுப்பு அம்மாவிடமிருந்தும் மற்றொன்று அப்பாவிடமிருந்தும் வந்தது.
  • X-குரோமொசோம் அம்மாவிடமிருந்தும், மற்றொரு X-குரோமொசோம் அல்லது Y-குரோமொசோம் அப்பாவிடமிருந்தும் வந்தது. XY இணைந்தால் ஆண்பாலாகவும், XX இணைந்தால் பெண்பாலாகவும் இருக்கும்.
  • MT என்பது இழைமணி மரபணுக்கள். இழைமணிகள் நம் உயிரணுவில் ஆனால் உட்கருவுக்கு வெளியே இருக்கும். இது அம்மாவிடமிருந்து குழந்தைகளுக்கு செல்கின்றது.
  • ஒவ்வொரு குரோமொசோமிலும் உள்ள மொத்த படிகள் (Bases), மரபணுக்கள் (Genes), ஒரு-படி-பலவுருமாற்றங்கள் (SNPs) குறிக்கப்பட்டுள்ளது. ஒரு-படி-பலவுருமாற்றங்கள் என்பது ஒரு மரபணுவிலுள்ள ஒரு படியில் ஏற்படும் மாற்றங்களை குறிக்கின்றது. அதன் ஒவ்வொரு மாற்றமும் வெவ்வேறு பண்புகளை தரும்.

மொத்தத்தில் ஒவ்வொரு மரபணு வரிசையில், ஒரு-படி-பலவுருமாற்ற இடத்தில் உள்ள படியை கொண்டு, நமது பண்புகளை கணிக்க முடியும். சில உதாரணங்கள்:
  • எந்த நோய்கள் (நீரழிவு, மூட்டுவலி, மாரடைப்பு, புற்று, மூளை நோய்கள், மன நோய்கள், ...) நமக்கு வர அதிக அல்லது குறைந்த வாய்ப்புள்ளது?
  • எந்த மருந்துகள் எப்படிப்பட்ட சிகிச்சை அதிக பலன் தரும்?
  • மதுபானம் போன்ற போதை பொருள்களும் எளிதாக அடிமையாகும் பண்புள்ளதா?
  • காப்பியை எளிதாக ஜீரணிக்கும் பண்புள்ளதா?
  • தோல், கண், முடி நிறங்கள் என்ன?
  • நிற மற்றும் சுவை குருடு உள்ளதா? பலருக்கு பலவகையான கசப்பு சுவையை அறிய இயலாது.
  • வலி உண்ர்திறன் அதிகமாக அல்லது குறைவாக உள்ளதா?
  • வழுக்கைத்தலை வர அதிக அல்லது குறைந்த வாய்ப்பு உள்ளதா?
  • வெவ்வேறு வகை அறிவுதிறனின் வாய்ப்பு விகிதம் என்ன?
  • தற்காலிக மற்றும் நீண்ட ஞாபகசக்தி திறன் அதிகமாக அல்லது குறைவாக உள்ளதா?

நம் இழைமணி மரபணுக்கள் அம்மாவிடமிருந்து குழந்தைகளுக்கு செல்கின்றது. இவ்வாறு செல்லும் போது சிறு மரபணு பிழைகள் (மாற்றங்கள்) ஏற்படலாம். ஆதி மனிதனிலிருந்து தலைமுறை-தலைமுறையாக இதில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டு நமது மூதாதையோர்களை தடம்பிடிக்க முடியும். இவ்வாறு 200,000 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் பரிணாம வளர்ச்சியடைந்த நமது முதல் மனித சந்ததியை தடம்பிடிக்க முடியும் (அதை அப்படியே இன்னும் பின்னோக்கி சென்று நமது நெருங்கிய உறவினர்களான குரங்கினத்தோடும் தடம்பிடிக்கலாம்). இழைமணி மரபணுக்களில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களை கொண்டு மனித இனத்தின் குடிபெயர்ச்சியை பல கிளை-சந்ததிகளாக (Haplogroups) பகுக்கலாம். இது தாய்வழி கிளை-சந்ததிகள் (இது போலவே, Y-குரோமொசோமின் மரபணு பிழைகள் கொண்டு தந்தைவழி கிளை-சந்ததிகளும் பகுக்கப்பட்டுள்ளது). உதாரணமாக பெருபான்மையான தென்-இந்தியாவினர் M-கிளை-சந்ததியின் சந்ததிகளாக இருக்கும். M-கிளை-சந்ததி 60,000 வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய சமயத்தில் L3-கிளை-சந்ததியிலிருந்து பிரிந்தது. L3-கிளை-சந்ததி L1-கிளை-சந்ததியிலிருந்து பிரிந்தது. கீழேயுள்ள படம் மனித குடிபெயர்ச்சியுடன் அதன் கிளை-சந்ததிகளையும் காட்டுகின்றது (இது 500 வருடங்களுக்கு முன்புவரை தான் பொருந்தும். அதன் பிறகு, கண்டங்களுக்கிடையே பயணம் எளிதாகி போனதால், இன்று பல கிளை-சந்ததி மனிதர்களையும் பல நாடுகளில் காணலாம்).
நாளை என்ன சாத்தியம் என்பதற்கு இது ஒரு ஆரம்பம் தான்! தான் யார், தன்னுடைய வரலாறு என்ன, தன்னுடைய உடலெழுத்து, தலையெழுத்து என்ன என்பதை அறிந்து கொண்ட முதல் விலங்கு மனிதன்! இதை கொண்டு, அவன் உயர்நிலை மாமனித இனமாகலாம்! பாரதி கம்பன் கவிதைகள் எழுதியதை போல், வருங்காலத்தில் புதிய தலைமுறை கவிஞர்கள் மரபணுக்களை எழுதலாம்!